நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை நெட்வொர்க் அதிநவீன கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
புதிய திட்டத்தின்படி, நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் பிரத்யேக ‘டேஷ்போர்டு’ கேமராக்கள் பொருத்தப்படும். இந்த வாகனங்கள் வாரம் தோறும் சாலைகளில் பயணித்து ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த கேமராக்கள் பதிவு செய்யும் உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மெஷின் லேர்னிங் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்யப்படும். இந்த ஏஐ அமைப்பானது சாலையில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குறைபாடுகளை மனிதத் தலையீடின்றி தானாகவே கண்டறியும் திறன் கொண்டது.
குறிப்பாக சாலையில் உள்ள குழிகள் மற்றும் விரிசல்கள். தேய்ந்து போன சாலைக் குறியீடுகள் (Lane Markings). பழுதடைந்த மின்விளக்குகள் மற்றும் உடைந்து போன பாதுகாப்பு தடுப்புகள் (Crash Barriers). சட்டவிரோத சாலை இணைப்புகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் விதிமீறிய வாகன நிறுத்தம்.
நெடுஞ்சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, மாதத்திற்கு ஒருமுறையாவது இரவு நேரங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் சாலை விளக்குகளின் நிலை, ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் தகவல் பலகைகளின் தெளிவுத்தன்மை ஆகியவை துல்லியமாக மதிப்பிடப்படும்.
தரவுகளை நிர்வகிப்பதற்கும், ஏஐ ஆய்வுகளைக் கண்காணிப்பதற்கும் ஒரு சிறப்பு ஐடி தளம் உருவாக்கப்படும். இதில் உள்ள ‘டேஷ்போர்டு’ மூலம் சாலைகளின் பழைய மற்றும் புதிய நிலையை ஒப்பிட்டுப் பார்த்து, பராமரிப்புப் பணிகள் எவ்வளவு விரைவாக நடைபெறுகின்றன என்பதை அதிகாரிகள் கண்காணிக்க முடியும். மேலும் இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் நெடுஞ்சாலைகளில் சரியான நேரத்தில் பழுதுகள் நீக்கப்படும் என்றும், இது சாலை விபத்துக்களைக் குறைத்து பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் என்றும் NHAI தெரிவித்துள்ளது.
