மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா 30 நாட்கள் விலக்கு அளிப்பதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தயாரானது. ஆனால், “சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்ய எங்களிடம் கூடுதல் எண்ணெய் இருப்பு இல்லை” என்று ஈரான் கைவிரித்துள்ளது.
தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதியை நம்பியே இருக்கும் இந்தியாவுக்கு, ஈரானின் இந்த அறிவிப்பு ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் வருவது நின்று போனது. இதனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு ஹோட்டல்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவு அதிகரித்துள்ளது.
இருப்பினும், ரஷ்யாவின் உதவி மட்டுமே இந்தியாவின் ஒட்டுமொத்த தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. இந்தியாவின் நீண்ட கால நண்பனாகக் கருதப்படும் ஈரான், இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய மறுத்துள்ளது இந்திய எரிசக்தி துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
