மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் கருமையடைந்துள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி மையங்களை இலக்கு வைத்து இஸ்ரேலிய ராணுவம் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய ஈரானில் அமைந்துள்ள அராக் (Arak) கனநீர் அணு உலை மற்றும் யாஸ்த் மாகாணத்தில் உள்ள மஞ்சள் கேக் உற்பத்தி ஆலை ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதனை ஈரானிய அரசு ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலால் கதிர்வீச்சு பாதிப்போ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்தாலும், இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, போர் அடுத்தகட்டத்திற்குச் செல்வதை உறுதிப்படுத்துகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்படும் என நிபந்தனை விதித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த அணு உலை தாக்குதல் நடந்துள்ளது.

இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 104 டாலரைத் தாண்டியுள்ளது. மறுபுறம், சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகள் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை ஈரான் நிராகரித்து வரும் நிலையில், “பதிலுக்குப் பதில்” என்ற பழைய சூத்திரம் இனி பலிக்காது என்றும், இஸ்ரேல் மிகப்பெரிய விலையைச் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் IRGC தளபதிகள் ஆவேசமாகத் தெரிவித்துள்ளனர்.
