தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் மற்றும் திமுகவின் முக்கிய முகமான உதயநிதி ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிட்ட டி.செல்வம், உதயநிதி ஸ்டாலினை விட 1244 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் சேப்பாக்கத்தில், முதல் தேர்தலிலேயே தவெக வேட்பாளர் முன்னிலை வகிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ள தற்போதைய நிலவரப்படி, டி.செல்வம் தொடர்ந்து தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தமிழகம் முழுவதும் தவெக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்தத் தொகுதியின் முடிவு ஒட்டுமொத்த அரசியலில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
