தைவான் பூகம்பம் : உதவி எண்கள் அறிவிப்பு!

தைவானில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய, அவசர உதவி எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்துள்ளது.

தைவான் தலைநகர் தைப்பேவில், இந்திய நேரப்படி இன்று காலை 5.28 மணிக்கு பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த பூகம்பம் பூமிக்கடியில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு, தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பூகம்பத்தால், கிழக்கு ஹுவாலியன் உட்பட பல்வேறு நகரங்களில், கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த பூகம்பத்தால், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மியாகோ மற்றும் யேயாம தீவுகளில் அலைகள் உயரே எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதேபோல், ஜப்பானின் ஒரு சில பகுதிகளிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மேலும், பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில்,  நிலநடுக்கத்தை தொடர்ந்து  தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய, அவசர உதவி எண்ணை இந்திய தைப்பே சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, தைவானில் உள்ள இந்தியர்கள் உதவிக்கு 0905247906 என்ற எண்ணிலும், ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சலிலும், தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்றுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author