ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் வரிகள் குறித்து ‘பிரிக்ஸ்’ கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்தார்.
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய அவர், போர், காலநிலை மாற்ற பாதிப்புகள் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் பின்விளைவுகளால் உலகளாவிய அளவில் தற்போது பெரும் அழுத்தம் உள்ளதாக குறிப்பிட்டார்.
இத்தகைய சவால்கள் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச அமைப்புகளையும் சிரமத்திற்கு உள்ளாக்குவதாக கூறினார். இதற்கிடையே சர்வதேச சட்டம் மற்றும் ஐநா சாசனத்திற்கு முரணான, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய போர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், பிராந்திய அளவில் நடக்கும் போரின் தாக்கம் அவற்றின் எல்லைகளைத் தாண்டி, எரிசக்தி விநியோகம், உணவு மற்றும் உர பாதுகாப்பு, பணவீக்கம் ஆகியவற்றில் பெரும் அழுத்தத்தை உருவாக்குவதாக கூறினார்.
குறிப்பாக மேற்காசியாவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்திற்கு ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் போன்ற முக்கிய வழிகளில் தடையற்ற போக்குவரத்து நடப்பது அவசியம் என்றும் தெளிவுபடுத்தினார்.
