சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்து சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.
மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளில் இந்தியாவில் ரூ.15.50 கோடி வசூல் செய்தது. இரண்டாம் நாளில் ரூ.24.15 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.28.35 கோடியும் வசூலாகியுள்ளது. இதனால் உள்நாட்டு வசூல் மட்டும் மூன்று நாட்களில் ரூ.68 கோடியைத் தாண்டியுள்ளது. உலக அளவில் மொத்த வசூல் ரூ.120 கோடியைத் தாண்டியிருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாவதற்கு முன்பு நிதிப் பிரச்சனை காரணமாக ஒரு நாள் தாமதம் ஏற்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், வெளியான முதல் மூன்று நாட்களிலேயே வலுவான வசூலைப் பெற்றுள்ள ‘கருப்பு’, சூர்யாவின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது சீரான வெற்றியைப் பெற்று வருகிறது.
ஆக்ஷன் டிராமா வகையைச் சேர்ந்த ‘கருப்பு’ படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரிஷா கிருஷ்ணன் ஹீரோயினாக நடித்துள்ளார். சிங்கர் சின்மயி ஸ்ரீபதா த்ரிஷாவுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்திரன்ஸ், நட்டி சுப்ரமணியம், சுப்ரீத் ரெட்டி, லொல்லு சபா மாரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், வரும் நாட்களில் இன்னுமே படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
