முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்து ‘ஹலோ’ சொல்லி உரையாடலைத் தொடங்கும் பழைய டேட்டிங் முறை, தற்போதைய ‘ஜென் Z’ தலைமுறையினரிடையே மெதுவாகக் குறைந்து வருகிறது. காபி கடைகளிலோ அல்லது விழாக்களிலோ ஒருவரை நேரில் பார்த்துப் பேசுவதை விட, இக்கால இளைஞர்கள் ஆன்லைன் மூலம் தொடர்புகொள்வதையே அதிகம் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
அறிமுகமில்லாத ஒருவரிடம் நேரில் சென்று பேசுவது எல்லை மீறும் செயலாகவோ அல்லது துன்புறுத்தலாகவோ பார்க்கப்படலாம் என்ற பயம் இளைஞர்களிடையே உள்ளது. மேலும், நேரில் சந்தித்துப் பேசும்போது ஏற்படும் நிராகரிப்பு பொதுவெளியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால், பலர் நேரடியாக அணுகத் தயங்குகிறார்கள்.
ஆன்லைன் டேட்டிங் செயலிகளும் சமூக ஊடகங்களும் உரையாடலைத் தொடங்குவதற்கு முன்பே ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவுகின்றன. இன்ஸ்டாகிராம் அல்லது டேட்டிங் செயலிகளில் ஒருவரைப் பின்தொடர்வதும், அவர்களின் பதிவுகளுக்குப் பதிலளிப்பதும் நேரடி அணுகுமுறையை விடப் பாதுகாப்பானதாக உணர்கிறார்கள்.
மரியாதை, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சம்மதம் குறித்த விழிப்புணர்வு தற்கால இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால், மற்றவருக்கு அசௌகரியம் ஏற்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாகவே அவர்கள் அந்நியர்களிடம் நேரில் பேசுவதைத் தவிர்க்கின்றனர்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் காதலிக்கும் விருப்பம் குறைந்துவிடவில்லை, மாறாகத் தொடங்கும் முறை மட்டுமே மாறியுள்ளது. நேரடி சந்திப்பில் உள்ள நிச்சயமற்ற தன்மையைக் குறைத்து, ஒருவரைப் பற்றி ஓரளவாவது தெரிந்துகொண்ட பிறகே தற்போதைய இளைஞர்கள் உரையாடலைத் தொடங்க விரும்புகிறார்கள்.
