தமிழக மின்சார வாரியத்திற்கு கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் கோடி கடன் உள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் சி.டி. நிர்மல்குமார், “மின்சார வாரியத்தை லாபகரமாக கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழைய திமுக அரசு பல இடங்களில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் நடைபெற்று வருகிறது பல வழக்குகள் சிபிஐ வசம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய வாரியம் மின்சார வாரியம். அனைத்தையும் சீரமைக்க வேண்டியது கட்டாயம். முதல்வரின் உத்தரவின் பேரில் மின்சார வாரியத்தை சீரமைத்து புத்துணர்ச்சி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.
மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் என்பது ஊழியர் பற்றாக்குறை இருக்கிறது. ஊழியர்களை அதிகப்படுத்திவிட்டு தான் மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் கணக்கீடு செய்ய முடியும். ஏற்கனவே 10-ம் தேதியிலிருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் ஆர்டர் போடப்பட்டுள்ளது. இந்தத்துறை மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கப்படும். மின்சார வாரியத்திற்கு கிட்டத்தட்ட ரூ.2.5 லட்சம் கோடிக்கடன் இருக்கிறது. இதற்கு முன் இருந்த நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளது. வரக்கூடிய மாதத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் நுகர்வோர்களுக்கு பயனளிக்கும். கடன் அதிகமாக இருந்தாலும் 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ச்சியாக நம்மால் கொடுக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முதலமைச்சர் எங்களது தேர்தல் வாக்குறுதிகளை சொல்லிவிட்டார்” என தெரிவித்தார்.
