திரையெல்லாம் செண்பகப் பூ!

Estimated read time 1 min read
நூல் அறிமுகம்:
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதிலும் பெண்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் தருவது திரைப்படங்கள்.
1980-90களில் வெளியான திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரங்களாகவே தங்களைக் கருதிக்கொண்டிருந்தனர் வெகுமக்கள். அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்ந்தன தமிழ்த் திரைப்படங்கள்.
காதல், உறவுகளின் பாசம் – உரசல்கள், பக்தி… என எல்லா ரசனைகளின் கலவையாக வெளிவந்த திரைப்படங்கள் மக்களைக் கவர்ந்ததில் வியப்பதற்கில்லை. பெண்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.
‘ஒரு திரைப்படத்தின் வெற்றி அதைப் பார்க்கும்போது மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல, பார்த்து முடித்து அதுகுறித்து எப்படிப்பட்ட உரையாடல் நிகழ்கிறது என்பதிலும் உள்ளது’ என்று குறிப்பிடும் இந்நூலாசிரியர், அப்படிப்பட்ட திரைப்படங்களையும் மக்கள் மனதில் குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்திய உணர்வுகளையும் இணைத்து ‘திரையெல்லாம் செண்பகப்பூ’ எனும் தலைப்பில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
திருவிழாக்கள் பெண்களுக்குத் தந்த சுதந்திரம், குதூகலம், பக்திப் படங்கள் பார்த்து சாமியாடிய பெண்கள், ஆற்றங்கரை குளியலின்போது பெண்களிடையே நிகழும் உரையாடல் என சினிமா கதாபாத்திரங்களையும் நிகழ்காலப் பெண்களின் வாழ்வையும் இணைத்து எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய உணர்வைத் தருகின்றன. இனி இந்தத் திரையெல்லாம் செண்பகப் பூக்களைக் காணச் செல்லுங்கள்.
* ஆண் கடவுளரைத் திரையில் காட்டும்போது மரியாதையும், பக்தியும் மட்டுமே பெண்களிடமிருந்து வெளிப்படுகிறது. அம்மன் எனும்போது அது அவர்களின் நெருங்கிய சிநேகிதி இடத்துக்கு வந்துவிடுகிறது. இதில் பெருதெய்வக் கோயில்களின் அம்பாளைவிட, அம்மனுக்குத்தான் மக்களை ஈர்க்கிற வலிமை இருந்தது.
* ஒரு பெண் எந்தப் பெண்ணிடம் சிநேகிதம் வைத்திருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவள் குணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அது நூறாண்டுக்காலத் தமிழ் சினிமாவிலும் யதார்த்தத்திலும் இன்று வரையிலும் தொடர்கிறது. நாயகி, தோழி என்பதெல்லாம் ஒரு வசதிக்காகப் பிரிக்கப்படுவது. அணுக்கமான தோழிகள்தான் பெண் வாழ்க்கையில் நாயகிகள்.
* சினிமாவைப் போன்று தாய்மையைக் கொண்டாடிய, மிகைப்படுத்திய படங்கள் வேறு எங்கும் வெளிவந்திருக்காது. அதுவரை அம்மா சென்டிமென்ட் காட்சிகள் அவ்வப்போது சினிமாக்களில் தலைகாட்டிக்கொண்டிருந்தன. எம்.ஜி.ஆர் அதை உச்சத்துக்குக் கொண்டுசென்றார்.
* ஒரு வீட்டின் சுவாரஸ்யம், ரகசியம், கோபம், எரிச்சல், சண்டை, சச்சரவு என எதைத் தொட்டாலும் அது தொடங்குகிற அல்லது முடிகிற இடம் சமையலறையாகவே இருக்கும். தமிழ் சினிமாவில் சமையலறைகளைக் காட்டிய படங்கள் ஏராளம் உண்டு. ஆனால் அதன் ரகசியங்களையும் சுவாரஸ்யங்களையும் எரிச்சல்களையும் சொன்ன படங்கள் சொற்பமே.
*******************
நூல்: திரையெல்லாம் செண்பகப்பூ

ஆசிரியர்: ஜா.தீபா

விகடன் பிரசுரம்

விலை: ரூ.323/-

#ThiraiyellaamSenbagapooBook #Cinema #சினிமா #VikatanPublishers #விகடன்பிரசுரம் #JDeepa #ஜாதீபா #திரையெல்லாம்செண்பகப்பூநூல்

The post திரையெல்லாம் செண்பகப் பூ! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author