பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரிமளா & கோ’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, நடிகை ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரைத்துறையில் நடக்கும் உருவகேலி குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
ஒரு காலத்தில் குண்டாக இருப்பவர்களைக் குண்டன் என்றும், நடை சரியாக இல்லாதவர்களை நொண்டி என்றும் மிகவும் சாதாரணமாக உருவகேலி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத சம்பவத்தையும் விவரித்துள்ளார்.
ஒரு படப்பிடிப்பின் போது, குமரிமுத்துவைப் போலவே கண்களை வைத்துக் காட்டி நடிக்குமாறு ஊர்வசியிடம் கூறப்பட்டிருக்கிறது. அவரும் அதேபோல் நடித்துக் காட்ட, அங்கிருந்த அனைவரும் கைதட்டிச் சிரித்துள்ளனர்.
அதன் பிறகு ஒருமுறை குமரிமுத்துவை ஊர்வசி பேட்டி எடுத்தபோது, அவர் தனது சிறு வயது ஆசைகளைப் பகிர்ந்துள்ளார். நன்றாகப் படித்துப் போலீஸ் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்டதாகவும், ஆனால் தனது கண் குறைபாட்டால் அந்த வேலை கிடைக்கவில்லை என்றும், டிரைவிங் பழகச் சென்றபோது ‘ஒற்றைக் கண்ணை வைத்துக் கொண்டு வந்துவிட்டான்’ என்று அவமானப்படுத்தியதாகவும் குமரிமுத்து கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நீ கூட ஒரு படத்தில் என்னை மாதிரியே கண்ணை வைத்துக் காட்டி நடிச்சல” என்று ஊர்வசியிடம் கூற, அதைக் கேட்டுத் அதிர்ச்சியடைந்த ஊர்வசி குற்ற உணர்ச்சியால் வெளியே சென்று அழுதுள்ளார்.
அதன் பின்னர், “இப்போது இந்த கண்ணுதான் எனக்குச் சோறு போடுகிறது” என்று குமரிமுத்து நெகிழ்ச்சியுடன் கூறியதாகவும், அந்த சம்பவத்திற்குப் பிறகு தன் வாழ்வில் யாரையும் எப்போதும் உருவகேலி செய்யக் கூடாது என்று தான் முடிவு செய்ததாகவும் ஊர்வசி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
