தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஒருவரை காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது.
நெட்டூர் பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவில் இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், மணமகன் வீட்டில் மேளதாளம் முழங்க உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்த சுமார் 9 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் பலரை சரமாரியாக வெட்டியது. இதில், ஏராளமானோர் காயமடைந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
ஒன்பதாவது குற்றவாளியான அய்யப்பன் என்பவர் தலைமறைவாகினார். அவர் நெல்லை மாவட்டம் அரசங்குளம் பகுதியில் பதுங்கியிருந்தது தெரியவந்த சூழலில், அவரை பிடிக்க முற்பட்ட போது போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால், பாதுகாப்பு கருதி குற்றவாளியை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதனைதொடர்ந்து காயமடைந்த குற்றவாளியும், ஒரு காவலரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
