வட கொரியாவில் மேற்கொள்ளவுள்ள அரசுமுறைப் பயணத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் ஜூன் 8ஆம் நாள் வட கொரியாவின் ரோடோங் சின்முன் என்ற செய்தித் தாளில் சீன-வட கொரிய நட்புறவு பற்றி கட்டுரையை வெளியிட்டார்.
அவர் இக்கட்டுரையில் கூறுகையில், இவ்வாண்டு, சீன-வட கொரிய நட்புறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட 65ஆவது ஆண்டாகும். வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசவை தலைவருமான கிம் ஜாங் உனின் அழைப்பின் பேரில், நான் வட கொரியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளேன். அவருடன் சீன-வட கொரிய பாரம்பரிய நட்புறவு பற்றி விவாதித்து, இரு நாட்டுறவு வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், சீனாவும் வட கொரியாவும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து, பொதுவான எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்ளும் சோஷலிச நட்பார்ந்த அண்டை நாடுகளாகும். காலம் மற்றும் சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், இரு நாட்டு பாரம்பரிய நட்புறவு மாறாது. சீன-வட கொரிய உறவைச் செவ்வனேப் பேணிக்காத்து, உறுதியுடன் வளர்ப்பது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசின் நிலையான கோட்பாடாகும் என்றும் தெரிவித்தார்.
