பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாநகரில் உள்ள நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில், ஆனித்தேரோட்ட பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி இந்தாண்டுக்கான விழா, அதிகாலையில் சிவச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கொடி மரத்திற்கு 18 வகைகளான சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
