பொய்க்கும் தென்மேற்குப் பருவமழை: விவசாயம் பாதிப்பு

Estimated read time 1 min read

வழக்கமாக 320 மில்லிமீட்டர் பெய்யும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு 40 சதவீதம் வரை குறையும் என்று வானிலை கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் நாட்டின் விவசாயத் துறை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வீசும் ஈரப்பதம் மிகுந்த காற்றே தென்மேற்கு பருவமழை ஆகும். இது நாட்டின் மொத்த ஆண்டு மழையில் சுமார் 80 சதவீத ஆகும். இதனாலேயே இது இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளது.

நெல், பருத்தி மற்றும் சிறுதானியங்கள் போன்ற காரீஃப் (Kharif) பருவப் பயிர்களின் விதைப்புக்குச் சரியான நேரத்தில் பருவ மழை அதாவது விதைப்புப் பணிகளுக்கு ஜூலை மாத மழையும் நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் போதிய மழையும் பெய்வது மிக அவசியமாகும்.

இந்தியாவின் விவசாயத்துக்கு மிக முக்கியமானதாக விளங்கும் தென் மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு ஆண்டு சராசரியில் 94 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது இந்தியா விவசாயத் துறையைப் பெரும் பாதிப்புக்குள் தள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதன் முன்னோட்டமாக கடந்த ஜூன் 25 ம் தேதி வரை காரீஃப் பயிர்களின் விதைப்பு சுமார் 18.27 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22.73 சதவீதம் குறைவாகும். நாட்டின் பல மாநிலங்களில் இன்னும் விதைப்புப் பணிகள் தாமதமாகி வருகின்றன.

மேலும் நெல் சாகுபடி பரப்பளவு 25.17 சதவீதம் குறைந்து 2.57 மில்லியன் ஹெக்டேராகவும், பயறு வகை பயிர்களின் விதைப்பு 30.48 சதவீதம் குறைந்து 1.49 மில்லியன் ஹெக்டேராகவும் எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பளவு 53.34 சதவீதமும் சரிந்து 1.69 மில்லியன் ஹெக்டேராக குறைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.

எல்நினோவின் தாக்கத்திலிலும் குறைந்த அளவு நீரிலேயே தாக்குப்பிடிக்கும் சிறுதானியங்களின் சாகுபடி பரப்பளவும் கூட 11.73 சதவீதம் குறைந்துள்ளது.

இப்போதே ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா முதல் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா வரை பரவியுள்ள மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சோயாபீன்ஸ் மற்றும் கரும்பு உற்பத்தியில் சுமார் 90 சதவீதமும், பருத்தி உற்பத்தியில் 80 சதவீதமும், நிலக்கடலை மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 70 சதவீதமும் இப்பகுதியிலிருந்தே கிடைக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் விளைவாக கடந்த ஏப்ரலில் 3.48 சதவீதமாக இருந்த சில்லறைப் பணவீக்கம் மே மாதத்தில் 4 சதவீதமாகவும், 4.2 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 4.78 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலிலும் நாட்டின் மொத்த பணவீக்கம் 4 சதவீதம் என்ற நடுத்தர இலக்குக்குக் கீழே தொடர்ந்து 16-வது மாதமாக இருந்து வருகிறது.

உள்நாட்டில் உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்யவும், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் வரும் செப்டம்பர் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

எல் நினோ காரணமாக மழைப் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கும் நிலையில் விவசாய உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

குறிப்பாக மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ள 315 மாவட்டங்களுக்காக சிறப்பு அவசரகாலத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது.

மேலும், ஒட்டுமொத்த மழைப்பொழிவு எழுபத்தைந்தில் இருந்து 100 மில்லிமீட்டரை எட்டும் வரை விதைப்பதை தாமதப்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் செயலாளர் மட்டத்திலான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், எல் நினோவால் உருவாகும் இடையூறுகளைக் குறைப்பதற்காக ஒப்பந்த விவசாயம், கிடங்கு உள்கட்டமைப்பு மற்றும் பல்வகைப்பட்ட கொள்முதல் ஆகியவற்றை வலுப்படுத்தியுள்ளன.

You May Also Like

More From Author