விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றம்?

Estimated read time 1 min read

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இதையொட்டி மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேசத்துக்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த கேபினட் அமைச்சர் எவரும் மத்திய அமைச்சரவையில் தற்போது இல்லை. தவிர, தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் தேவை எழுந்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில், திரிணமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளில் இருந்து வந்த எம்.பி.,க்களால், தே.ஜ., கூட்டணி விரிவடைந்துள்ளது. இவர்களில் சிலர் மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றனர்.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தி.மு.க., மற்றும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு போன்ற கட்சிகள் ஆதரவு அளிப்பது குறித்தும் பேச்சு அடிபடும் நிலையில், அவற்றுக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்.ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில், பல காலியிடங்கள் உருவெடுத்துள்ளன. ஜார்ஜ் குரியன் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் தங்கள் ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் இணையமைச்சர் பி.எல்.வர்மா ஆகியோரின் ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் விரைவில் நிறைவடைகிறது. இருவரும் உ.பி.,யில் இருந்து தேர்வானவர்கள். அங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் அவர்களை மீண்டும் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைத்து, அமைச்சரவையில் நீடிக்க வைத்தாக வேண்டும்.இந்த காரணங்களால், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதமே தன் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களைச் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால், இருபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம்.சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறைக்கப்படலாம், அதே நேரத்தில் சிலருக்குப் புதிய மற்றும் பெரிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சில தலைவர்கள் அரசிலிருந்து, மீண்டும் கட்சி அமைப்பிற்குத் திரும்பவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதில் முக்கிய அம்சமாக, ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய தர்மேந்திர பிரதானுக்கு வேறு இலாகா ஒதுக்கப்பட்டு மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவரப்பட உள்ளதாக தெரிகிறது. காரணம், பார்லி., வளாகத்தில் அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு அருகில் தர்மேந்திர பிரதானுக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக அமைச்சர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும்.

You May Also Like

More From Author