சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்..!!

Estimated read time 0 min read

ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.

ஏமன் தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதேவேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதியும் தாக்குதல் நடத்தியது. மேலும், ஏமன் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் தீவிரமடைந்து வருகிறது.

பொதுமக்கள் குடியிருப்புகள், விமான நிலையம், விமானப்படைத்தளம், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் என பல்வேறு உள்கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 73 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த சில நாட்களுக்குமுன் சவுதி நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுதி பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

You May Also Like

More From Author