விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, 16 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆயிரத்து 562 சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில், மீதமுள்ள சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.
சீனிவாசபுரம்-பட்டினப்பாக்கம், பல்கலைநகர்-நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் என 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் கட்டுப்பாட்டு அறைகள், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், படகுகள் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
டிரோன்கள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் பீச் பக்கிகள் மூலம் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளன. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்றும், விதிமீறலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
