பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற திருமாவளவன் கருத்தை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 29 வது நினைவு நாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சரியானதுதான்.. மத்திய அரசுக்கு என்று ஏதாவது நிதி உள்ளதா?. மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதி. மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும், மத்திய அரசின் நிதி வருவாயை பெருக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பேரிடர் காலத்தில் நிதியை சரியாக வழங்காமல், புதிய கல்விக் கொள்கைக்கு கையெழுத்திட்டாதால் கல்வித்துறைக்கு உரிய நிதியை தருவேன் என்று கூறுவது எல்லாம் ஏற்க முடியாது. ஜி.எஸ்.டி, நீட் தேர்வு ரத்து இந்தி மொழியை திணிப்பதை எல்லாம் மற்ற மாநிலங்கள் எதிர்ப்பதற்கு முன்பே எதிர்த்தது தமிழகம் தான். அதேப்போல மதுக்கடைகளை மற்ற மாநிலங்கள் மூடுவதற்கு முன்பாக நாம் மூட வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது எங்கள் கட்சி பிரச்சினை; மக்கள் பிரச்சினை இல்ல. அதை நான் பார்த்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.