பனாமா கால்வாயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சாத்தியம் குறித்து அமெரிக்க அரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பேசிய கருத்தை, அமெரிக்க மக்களுக்கான பொலிவேரியன் கூட்டணி-மக்களின் வர்த்தக ஒப்பந்தம் என்ற கூட்டணி டிசம்பர் 24ஆம் நாள் செவ்வாய்கிழமை வன்மையாக கண்டித்துள்ளது.
பனாமா கால்வாய் ஒரு முக்கியமான சர்வதேச நீர்வழிப் போக்குவரத்து வசதி ஆகும். இந்த கால்வாய், சர்வதேச சட்டம் மற்றும் டோர்ரிஜோஸ்-கார்ட்டர் ஒப்பந்தங்கள் உட்பட வரலாற்று உடன்படிக்கைகளின் மூலம் பாதுகாக்கப்படுகிறது என்று இந்த கூட்டணி வெளியிட்ட ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பனாமா கால்வாய், பனாமாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்பதை இந்த ஒப்பந்தங்கள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, டிரம்பின் கருத்து, பனாமா இறையாண்மைக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல் ஆகும் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
டிரம்பின் கருத்து, பனாமாவுக்கு மட்டுமல்லாமல், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று இக்கூட்டணி எச்சரித்ததோடு, பனாமா தனது இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு மற்றும் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.