டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்ற நிலையில், அவரை தொடர்ந்து 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 05ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 27 வருடங்களுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரேகா குப்தா ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்ற நிலையில், டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், ரேகா குப்தாவை தொடர்ந்து 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பர்வேஷ் வர்மா, மன்ஜிந்தர் சிங், ஆஷிஷ் சூட், பங்கஜ் சிங், கபில் மிஸ்ரா, ரவீந்தர் சிங் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சராக பதவியேற்ற பர்வேஷ் வர்மா துணை முதல்வராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.