கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 28-ம் தேதி உண்ணாவிரத போராட்டம், அதனை தொடர்ந்து காத்திருப்பு ,கஞ்சி தொட்டி திறப்பு அதன் பின்னர் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று ஐந்தாவது நாளாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர் இதனை அடுத்து தீயணைப்படை வீரர்கள், சுகாதார துறை மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென மீனவ சங்க பிரதிநிதிகள் அவசர ஆலோசனை நடத்தி தீக்குளிப்பு போராட்டத்தை ஒத்திவைத்து காத்திருப்பு போராட்டமாக நடத்தி வந்தனர். இதனை அடுத்து தமிழக முதல்வர் இலங்கை வசம் உள்ள படகிற்கு 8 லட்சம் ரூபாயும் சிறையில் உள்ள மீனவர்களுக்கு 500 ரூபாயும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மீலைர்களை அழைத்து சென்று வெளியுறவு துறை அமைச்சரை சந்திக்க நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அழைக்கப்பட்டதை அடுத்து ஐந்து நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதனை அடுத்து மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வருக்கு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நன்றியும் தெரிவித்துள்ளனர். மேலும் 43 ஆண்டுகளாக தாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற 21 ஆம் தேதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் தங்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படாத பட்சத்தில் பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படுமோ அப்போது அனைத்து மீனவர்களும் ஒன்று திரட்டி பாம்பன் பாலத்தை திறக்க விடாமல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.