தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் விழாவினை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மேளதாளம் முழங்க இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதன் பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்கள் இடையே திருத்தேரோட்டம் தொடங்கியது . இதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இந்து அறநிலையத்துறை ஆணையாளர் ஸ்ரீதர், இணை ஆணையாளர் அன்புமணி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால்,கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதி ராஜா, சண்முகராஜா, ரவிச்சந்திரன், நிறுத்திய லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது அதனை தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இரண்டு தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து மதியம் சுமார் ஒரு மணி அளவில் நிலையை அடைந்தன. தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.