சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக விமானங்களில் கோளாறு ஏற்படுவது, விபத்தில் சிக்குவது போன்ற செய்திகள் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் கடந்த 12ம் தேதி விபத்தில் சிக்கியது.
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
இதில் விமானத்தில் பயனித்த இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேரில் 241 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். அத்துடன் மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள் 10 பேர், பொதுமக்கள் என 33 பேர் என மொத்தம் 274 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த விமான போக்குவரத்துத் துறையையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்த கோர சம்பவத்திற்கு பிறகு அனைத்து விமானங்களும், முழுமையான பரிசோதனைக்கு பின்னரே இயக்கப்படுகின்றன. விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறு இருந்தாலும், அதை சரி செய்த பின்பே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் சில மணி நேரம் தாமதத்திற்கு பிறகு விமானங்கள் புறப்படுவது, அல்லது ரத்து செய்யப்படுவது போன்றவை நடக்கின்றன. பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி நேற்றைய தினம் ஹாங்காங்கிலிருந்து டெல்லி வர இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் பறந்தபோது விமானி, தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில், மீண்டும் விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பி பயணிகளை காப்பாற்றினார். ஹஜ் பயணிகளுடன் லக்னோ வந்த விமானத்தில் தரையிரங்கும்போது தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை- லண்டன் இயக்கப்பட்டு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தான் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நள்ளிரவு 12.45 மணிக்கு கொல்கத்தாவிற்கு வந்த விமானத்தை காலை 5.30 மணி வரை முயன்றும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.