எழுத்தாளர்கள் ஏழைகள் அல்லர்!

Estimated read time 0 min read
இலக்கியவாதிகள் எவ்விதத்திலும் அபூர்வமான பிறவிகள் இல்லைதான். அதேவேளை மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சகமனிதர்களின் மேலான வாழ்வுக்காக, அவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் வாழ்வை அலட்சியம் செய்துவிடுகிறார்கள்.

மனிதர்களின் சுதந்திர வாழ்வுக்காக, இங்கு இருவகையான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். மார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோரது இயக்கம் ஒருவகை. ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், கீட்ஸ், புக்கோவ்ஸ்கி, மாயா ஏஞ்செல்லோ, நெரூடா, தாகூர், பாரதி போன்றோர் இன்னொரு வகை.
பெருவெளி அரசியல் போராட்டங்கள் போலவே, பண்பாட்டுத் தளத்தில் மாற்று மதிப்பீடுகளை உருவாக்க விரும்புகிற கலைஞர்களின் இடமும் மதிப்புக்குரியவை. தாங்கள் நம்பும் மேலான கலையின் பொருட்டு, இவர்கள் தம் இருப்பைப் பணயம் வைக்கிறார்கள்.
‘தி கிரேப்ஸ் ஆஃப் ரேத்’ நூலுக்காக புலிட்சர் விருது வென்றவர் ஜான் ஸ்டீன்பெக். என்ன சொல்வது. இவர் தன்னை ஏழையாகவோ, பணக்காரராகவோ கருதவில்லை. எழுத்தாளராகக் கருதினார். எஸ்டேட் ஒன்றின் பராமரிப்பாளராக, மீன்குஞ்சு பொறிக்கும் தொழிற்சாலை பணியாளராக வேலைபார்த்தவர்.
‘தி மாங்லர்’, ‘சேலம்ஸ் லாட்’ ‘டுமாஸ் கீ’ போன்ற நாவல்களை எழுதியவர் ஸ்டீபன் கிங். ஜவுளி மில் ஒன்றில் 20 மணி நேர ஷிப்ட் பார்த்தார். சலவை நிலையம் ஒன்றில் பணி செய்தார். சார்லஸ் டிக்கன்ஸ் வாரத்தில் 6 ஷில்லாங் சம்பாதிக்க ஷூ பாலிஷ் போட்டார். அனிமல் ஃபார்ம், ஜார்ஜ் ஆர்வெல் பிழைப்பின் நிமித்தம் பாத்திரம் கழுவினார்.
உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் வறுமையை அனுபவித்தார்கள்.
ஆனால் இவர்கள் யாரும் ஏழைகள் அல்லர். கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் எனும் மாபெரும் செல்வங்களை இச்சமூகத்துக்குத் தந்தவர்கள். இச்சமூகம் யாராவது ஒருவருக்கு புத்தி சொல்வதென்றால் அது இவர்களது வரிகளைதாம் மேற்கோள் காட்டுகிறது.
யவனிகா அப்படி ஒரு கவிஞர். அவரைப் பொறுத்த அளவில் அவருக்கு வறுமை இல்லை. ஆனாலும் நாம் அவர் மீது அக்கறை கொள்கிறோம். ஒரு கவிஞன் ஏதோ ஒரு கணத்தில் வெறுப்படைந்து, குத்துப்பாட்டோ, டிவி சீரியலுக்கு வசனமோ, எழுதப் போய்விடக் கூடாது! என்கிற நல்லெண்ணத்தால் வந்த அக்கறை.
இந்த முயற்சியின்போது எங்களை ஒரு கேள்வி துரத்தியது. சிலர், ‘அவருக்கு என்ன?’ என்றார்கள். இங்கு ஒருவர் வெள்ளத்தில் மூழ்கவேண்டும். பூகம்பத்தில் சிக்கவேண்டும். நோயால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் இரக்கம் பிறக்கும். இந்த மனநிலை உள்ளவர்களிடம் இருந்து வெளியேறினோம். இன்னும் சிலர். செய்த உதவிக்காக காலம் முழுவதும் நன்றியறிதலை எதிர்பார்ப்பவர்கள். இவர்களிடமிருந்தும் விலகினோம்.
எனில், எங்கள் கண்ணில் பட்டவர்கள் சிலரே. சொற்பமான அளவில்தாம் எங்களால் நிதியைச் சேர்க்க முடிந்தது. யவனிகா போல, இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் கலைஞர்களே. அதிகாரத்திடம் தரகு வேலை செய்து பழகாதவர்களால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்தோம்.
ஒரு கட்டத்தில், ஒரு கவிஞனின் சமூக மதிப்பை, இவ்வூடகங்களின் வழி கூவிக் கூவி விற்கிறோமோ? என வெட்கம் அடைந்தோம். எழுத்தால் நாம் பெற்றிருக்கிற கூருணர்வை இழந்துவிடக்கூடாது எனும் காரணத்தினால் நாகரீகமான இதயக்கதவுகளை மட்டுமே தட்டினோம். தட்டிக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு அது கேட்டால் மகிழுங்கள்.
நன்றி: பேஸ்புக் பதிவு

Please follow and like us:

You May Also Like

More From Author