வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்தக் கோரி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘யுனைடெட் போரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ்’ (UFBU) விடுத்துள்ள அழைப்பின் பேரில் இன்று (ஜன. 27) நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
தற்போது மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கி மற்றும் எல்ஐசி நிறுவனங்களைப் போல அனைத்துச் சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதே ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
இதற்குப் பதிலாக வார நாட்களில் தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றத் தயார் எனச் சங்கங்கள் தெரிவித்த போதிலும், மத்திய அரசுடன் கடந்த ஜன. 23 அன்று நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதன் காரணமாக, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் இன்று பணியைப் புறக்கணித்துள்ளதால், நேரடிப் பணப் பரிவர்த்தனை மற்றும் காசோலை பரிமாற்றம் போன்ற சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், HDFC, ICICI, Axis போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.
