பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு- ரேவதியின் திரைப் பயணம்

Estimated read time 1 min read
பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு… என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் முகத்தின் ஒரு பாதியை மறைத்துக் கொண்டு வெட்கப்படும் ரேவதியின் முகம் நிச்சயம் நம் மனதில் வந்துபோகும்.

தமிழ் சினிமாவின் 80-களின் நாயகிகளில் தனித்துவமானவர் ரேவதி. இரண்டு முறை தேசிய விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றவர் ரேவதி. படங்களை இயக்கவும் செய்தார்.
இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய R எழுத்தில் தொடங்கும் நாயகிகளில் ஒருவர். முதல் படமான ‘மண்வாசனை’யில் நடிக்கும்போது ரேவதிக்கு 16 தான்.
ஆனால், மெச்சூரான கேரக்டரில் நடித்திருந்தார். கேரள மாநிலம் கொச்சியில் பிறந்து வளர்ந்த ரேவதிக்குத் தமிழ் சரளமாகத் தெரியாது. முதல் படம் கிராமத்துப் படம். அதுவும் வட்டார வழக்கு கலந்த தமிழ் பேச வேண்டும்.
ஆயினும் படப்பிடிப்புத் தொடங்கியதுபோது தமிழ் பேச சிரமப்பட்ட ரேவதி, அப்படம் முடிவதற்குள் டப்பிங் பேசுமளவு தமிழில் தேறியிருந்தார். அப்படத்தில் அவர் டப்பிங் பேச ஏழு நாள்களாயிற்றாம்.
எந்தக் கேரக்டராக இருந்தாலும் சரி, அந்தக் கேரக்டருக்குள் நடிகர்கள் தம்மைக் கச்சிதமாகப் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை நடிப்பின் இலக்கணமாகச் சொல்வார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகச் சொல்லக்கூடியவர்களில் ஒருவர்தான் ரேவதி.
மண்வாசனையில் வெளியுலகம் அறியாத கிராமத்துப் பெண், ‘கைக்கொடுக்கும் கை’யில் பார்வையற்ற பாத்திரம்,
‘புதுமைப் பெண்’னில் புரட்சிகரமான பெண், ‘புன்னகை மன்னனில் காதலும் நாட்டியமும் கலந்த பாத்திரம், கைதியின் டைரியில் குறும்புக்காரப் பெண், பகல் நிலவு படத்தில் முரடனைச் சரிசெய்ய நிதானமும் பொறுமையும் கொண்டவளாக,
அரங்கேற்ற வேளையில் ‘உச்சபட்ச குறும்பும் வேடிக்கையான திருடியுமாக, கிழக்கு வாசல், தெய்வாக்கு, வைதேகி காத்திருதாள், என் அசை மச்சான், தேவர் மகன்’ படங்களில் முதிர்ந்த மனநிலை கொண்ட பெண்ணாக ஒரு நடிகையாக எத்தனை விதமாக நடிக்க முடியுமா அத்தனையிலும் வெற்றிகரமாக நடித்தவர் ரேவதி.
நாயகிகளின் நாயகி என்று ரேவதியை நிச்சயம் சொல்லலாம். புன்னகை மன்னனில் கமல்ஹாசனோடு போட்டிப்போட்டு ஆடும் ரேவதி ஆடும் நடனம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒன்று.
ரேவதியின் தமிழ் சினிமா கதாபாத்திரங்கள் தேர்வு கச்சிதமானவை. தொடக்கத்தில் புன்னகை மன்னன், ஒரு கைதியின் டைரி எனத் துள்ளல் மிகுந்த சேட்டைக்காரப் பெண்ணாக நடித்துக் கொண்டிருந்தவர், சட்டென்று கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, தேவர் மகன் உள்ளிட்ட படங்களின் மெச்சூரான கேரக்டருக்குத் தாவினார்.
இந்த மாற்றம் ரசிகர்களால் மிக இயல்பாக ஏற்றுக்கொள்ளும் விதமாக அமைந்தது. அவற்றுள் இரண்டு கதாபாத்திரங்கள் குறிப்பிடத்தகுந்தவை.
ஒன்று, 1986-ம் ஆண்டு வெளிவந்த ‘மெளனராகம்’ திவ்யா. கல்லூரி செல்லும் ஒரு பெண் ரவுடியைப் பார்த்து மிரள்வதும் அதன்பின் அந்த ரவுடியையே காதலிப்பதும் தமிழ் சினிமாவில் புதிதான ஒரு கதாபாத்திரம் அல்ல.
ஆனால், அதற்கு உயிரூட்டியிருப்பார் ரேவதி. இப்படத்தில் கார்த்திக் நடித்த மனோகர் கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது.
அதற்கு அப்பாத்திரப் படைப்பு மட்டுமே முழு காரணம் என்று சொல்ல முடியாது. அவரோடு அக்காட்சிகளில் அவரோடு நடித்த ரேவதியும் ஒரு பிரதான காரணம்.
உதாரணமாக, ஒரு ஹோட்டலில் ரேவதியின் அப்பா வர, கார்த்திக் ‘சந்திரமெளலி’ என அழைப்பார்.
அவரின் சேட்டையான குரல் மொழியை நமக்கு நெருக்கமாக்கியது அப்பாவுக்குப் பயந்து ஒடுங்கிய ரேவதியின் நடிப்பும்தான். ஒருவேளை அந்தக் காட்சியில் ரேவதி சொதப்பியிருந்தால் கார்த்திக் என்ன செய்திருந்தாலும் பார்வையாளரை ஈர்த்திருக்காது.
இவ்வளவு குறும்பான பெண் அடுத்தச் சில நிமிடக் காட்சியில் திருமணமான, தேர்ந்தெடுத்த சொற்களை மட்டுமே பேசும் பாத்திரமாக மாற வேண்டும்.
அதைத் துளியும் மிகையில்லாமல் செய்திருப்பதே ரேவதியின் திறமைக்குச் சான்று.
இப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவிற்கு பேசப்பட்டதோடு இன்றைக்கும் நடிகை ரேவதியை திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக அவருக்கு அமைந்துவிட்டது. அந்த அளவிற்கு திவ்யா எனும் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அதேபோல இயக்குநர் மணிரத்தின் இன்னொரு திரைப்படமான ‘அஞ்சலி‘ திரைப்படத்தில் அம்மாவாக நடித்து வொறொரு பரிமாணத்தையும் காட்டியிருந்தார்.
இப்படி ஒட்டுமொத்தமாக 80 களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்துவந்த இவர் இந்தியில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோடியாக ‘லவ்’ திரைப்படத்திலும் அதேபோல தெலுங்கில் ‘சீதம்மா பெல்லி‘, ‘கிலுக்கம், ‘அங்குரம்‘ போன்ற படத்தின் நடிப்பிற்காக போற்றப்பட்டார்.
அடுத்து, அரங்கேற்ற வேளை மாஷா கேரக்டர். குறும்பு, வேடிக்கையான திருடும் குணமும் கொண்டவள் ஆஷா. பிரபுவோடும் மூத்தக் கலைஞர் வி.கே.ராமசாமியுடனும் அப்படம் முழுக்க வலம் வந்து சிரிக்க வைக்கும் மிகவும் சவாலான வேலை ரேவதிக்கு. ஆனால், அதை இயல்பாகச் செய்திருப்பார்.
அதேபோல மலையாளத்தில் ‘பட்டதே கிளிக்கூடிலும்‘, ‘காக்கோதிக்காவிலே அப்பூப்பன் தாடிகள்‘ எனும் திரைப்படத்திலும் இவர் வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிப்பிற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாநில விருதுகளை வாங்கிக் குவித்த இவருக்கு ‘தேவர் மகன்’ திரைப்படம் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.
மேலும் ‘என் ஆசை மச்சான்’, ‘மறுபடியும்’ ‘மகளிர் மட்டும்’ போன்ற திரைப்படங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
ஒரு காமெடி படத்தில் ஒரு நாயகி தனித்துத் தெரிவது என்பது தமிழ் சினிமாவில் அரிது அரிதான செயல். அப்படியான ஒரு வாய்ப்பு ரேவதிக்கு வந்தது. அதை வெற்றிகரமாகவும் கையாண்டிருப்பார் ரேவதி.
இப்போது, ரேவதியின் இரண்டாம் இன்னிங்க்ஸ். குறும்பு பெண் பாத்திரத்திலிருந்து மெச்சூரான பாத்திரம் என நகர்ந்து இறுதி வரை அப்படியே செல்வதுதான் தமிழ் சினிமா நாயகிகளின் இயல்பு.
ஆனால், ரேவதி தனது இரண்டாம் இன்னிங்க்ஸில் திரும்பவும் அரங்கேற்ற வேளை ஆஷாவா (குலேபகாவலியில் மாஷா)வாகக் கலக்கத் தொடங்கியிருக்கிறார். பவர் பாண்டியில் சின்னப் பாத்திரம்தான். ஆனால், அதைத் துல்லியமாகச் செய்திருப்பார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் நடித்த இவர் தொடர்ந்து நடிப்பிற்காகவும் நடனத்திற்காகவும் ரசிகர்களிடயே என்றும் நாயகிகளின் நாயகியாக கொண்டாடப்பட்டுக் கொண்டே இருப்பார்.
– சரவணன்

Please follow and like us:

You May Also Like

More From Author