“ஒரே மேடையில் தவெக-காங். நிர்வாகிகள்”..

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜனதா, இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நேற்று சென்னை வந்தார். அவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து, சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாள்களாக தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இடையே சந்திப்புகள் நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த

விழாவில் காங்கிரஸ் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் ஒரே மேடையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுசாமி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் த.வெ.க. மூத்த நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்களும் பங்கேற்பார்கள் என அழைப்பிதழ் வெளியிடப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இவ்விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் பேசிய திருச்சி வேலுசாமி, “பாவப்பட்டவர்களை ரட்சிக்கவும், ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றவும் ஏசு கிறிஸ்து தோன்றினார். பாவிகள் ரட்சிப்பு மற்றும் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் எண்ணம் கொண்டவர்களே இங்கு கூடியுள்ளோம். தமிழகத்தில் ஏற்படப்போகும் பிரம்மாண்ட அரசியல் மாற்றத்திற்கு இது ஒரு திருப்புமுனை நிகழ்வாக அமையும்.

அதன் பின்னணியை நீங்கள் புரிந்துகொள்ளலாம்; புரிந்தவர்கள் கைதட்டுவார்கள். நாம் இணைந்திருக்கிறோம், இந்த இணைப்பு மேலும் பலப்படும். நல்லவர்கள் இணைந்தால் நல்லதே நடக்கும்,” என்றார். மேலும் இந்த நிகழ்வுகள், வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய கூட்டணி சாத்தியங்கள் உருவாகி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author