2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், ஆல்-ரவுண்டர் அக்ஷர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சமீபகாலமாக பார்ம் அவுட்டில் இருந்த சுப்மன் கில் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சன் மற்றும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த அணியில் தொடக்க வீரராக அதிரடி காட்டி வரும் அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மத்திய வரிசைக்கு வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சு துறையில் அனுபவ வீரர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா வேகப்பந்து வீச்சு கூட்டணியை அமைக்கின்றனர்.
இந்த சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆகியோர் எதிரணிகளுக்கு சவால் அளிக்க தேர்வாகியுள்ளனர். நடப்பு சாம்பியனான இந்தியா, தனது முதல் போட்டியில் பிப்ரவரி 7-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
