மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி, தொகுதி மக்களிடையே உரையாற்றினார். தான் வெற்றி பெற்றால் மீனாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள இறைச்சிக் கடைகளை மூடிவிடுவேன் என்று பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய் என்று அவர் மறுத்துள்ளார்.
வாரத்தில் ஆறு நாட்கள் கறி சோறு சாப்பிடும் பழக்கம் கொண்ட நான், எப்படி கறிக்கடைகளை மூடுவேன் எனக் கேள்வி எழுப்பிய அவர், தான் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்குப் பிரம்மாண்ட கறி விருந்து வைப்பேன் என்றும் கலகலப்பாகத் தெரிவித்தார்.
தன்னைப் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியூர்க்காரர் என்று விமர்சித்தது குறித்துப் பேசிய சுந்தர் சி, சென்னையில் வசிக்கும் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடலாம் என்றால், தான் மதுரையில் போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று பதிலடி கொடுத்தார். தற்போது தான் மதுரையிலேயே வீடு எடுத்து தங்கிவிட்டதாகவும், இனி தான் ஒரு மதுரைக்காரன் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மக்கள் நேரில் பார்ப்பதே அரிதாக உள்ள நிலையில், தான் மக்களுடன் இருந்து பணியாற்றப்போவதாகவும், தனது வெற்றி 200 சதவீதம் உறுதி என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
