தமிழகத்தின் மிகச்சிறந்த கல்வியாளராகவும், சமச்சீர் கல்வி மற்றும் மாணவர் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் (95), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (பிப். 3) இரவு சென்னையில் காலமானார்.
கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும், கல்வி வணிகமயமாவதற்கு எதிராகவும் பல்வேறு ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தமிழக அரசுக்கு வழங்கியவர் இவர். இறப்பிற்குப் பின்னரும் பயனுள்ளவராக இருக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகப் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது.
அவரது மறைவு தமிழக கல்வித் துறைக்குப் பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் அவருக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
