ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தோடா மாவட்டத்தில் பனியில் சிக்கித் தவித்த 40 ராணுவ வீரர்கள் மற்றும் 20 பொதுமக்கள் என மொத்தம் அறுபது பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து 5500 அடி உயரத்தில் அமைந்துள்ள சத்தர்காலா கணவாய் பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்த பனியால் சுமார் ஆறு அடி ஆழத்திற்குப் பனிக்குவியல்கள் காணப்பட்டன.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் எல்லை சாலைகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் சுமார் 38 கிலோமீட்டர் தூரத்திற்கு இரவு பகலாகப் பனியை அகற்றி ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்களையும் பொதுமக்களையும் மீட்டுள்ளனர்.
இதேபோல் ராஜௌரி மாவட்டத்திலும் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவிற்குப் பனி அகற்றப்பட்டுப் போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது.
