மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15.19 சதவீதம் அதிகமாகும்.
நாட்டின் ராணுவ நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு ரூ.7,84,678 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இது ரூ.6,81,210 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 2 சதவீதமாகும். ‘ஆபரேஷன் சிந்துர்’ (Operation Sindoor) நடவடிக்கைக்குப் பிந்தைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நிதி உயர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவின் இந்த அதிரடி பட்ஜெட் உயர்வு குறித்து பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர் கமர் சீமா கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் இந்த நிதி ஒதுக்கீடு வழக்கமான ஒன்று அல்ல. தனது ராணுவ வலிமையை மிக வேகமாக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து அதிநவீன ‘சு-57’ (Su-57) ரக போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இது நடந்தால் பாகிஸ்தானுக்குப் பெரும் சவாலாக அமையும்.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தரப்பிலிருந்து அழுத்தம் இருந்தாலும், ஆயுதக் கொள்முதலில் ரஷ்யாவையே இந்தியா தனது நம்பிக்கைக்குரிய கூட்டாளியாகக் கருதுகிறது. சு-57 விமானங்கள் தவிர, எஸ்-400 (S-400) ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளைக் கூடுதலாகக் கொள்முதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. மேலும் பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடனும் இந்தியா பாதுகாப்பு உறவை வலுப்படுத்தி வருகிறது” என கமர் சீமா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் போக்கு மற்றும் சீனாவிடமிருந்து எழும் சவால்களை எதிர்கொள்ளவே இந்தியா தனது பாதுகாப்புச் செலவினங்களை அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சி பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்களுக்குச் சீனா உதவும் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் உள்ளதாக அந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
