வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய தமிழகத்தின் டாப் 12 சிவன் கோவில்கள்..!

Estimated read time 0 min read

தமிழகத்தின் மிக முக்கியமான 12 சிவாலயங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்று, உலக அமைப்புக்களாலேயே பாரம்பரிய தலங்களாக அறிவிக்கப்பட்டவையாகும். இந்த தலங்களுக்கு சென்று இங்குள்ள ஈசனை தரிசித்து, வழிபட்டாலே வாழ்வில் வெற்றி, முக்தி, புண்ணியம் ஆகியவை கிடைக்கும்.

புகழ்பெற்ற சிவாலயங்கள், தனித்துவமான சிவாலயங்கள், பாடல் பெற்ற தலங்கள் என பல தலங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமின்றி, தமிழகத்திலும் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பழமையான சிவ லிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

மனித அறிவுக்கு எட்டாத பல ஆச்சரியங்களைக் கொண்ட சிவாலயங்களும், நவீன அறிவியலுக்கே சவால் விடும் வகையில் பல அற்புதங்களை கொண்ட சிவாலயங்களும் தமிழகத்தில் நிறைய உள்ளன. அப்படி தமிழகத்தில் அமைந்துள்ள தனித்துவமான, அதே சமயம் சக்தி வாய்ந்ததாகவும், புகழ்பெற்றதாகவும் உள்ள சிவாலயங்களில் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய முக்கியமான 12 சிவாலயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் :

இந்தியாவின் நான்கு திசைகளிலும் அமைந்துள்ள நான்கு புனித தலங்களை இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்பார்கள். வடக்கில் பத்ரிநாத், தெற்கில் ராமேஸ்வரம், கிழக்கில் பூரி, மேற்கில் துவாரகை ஆகியவற்றில் குறிப்பிடப்படும் ஒரே சைவ தலம் அல்லது சிவன் கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தான். மற்ற மூன்றும் வைணவ தலங்களாகும். காசிக்கு அடுத்த படியாக முக்தியை தரும் தலம், கடலோரத்தில் அமைந்த சிவாலயம், மிகப் பெரிய பிரகாரத்தை கொண்ட ஆலயம் என பல சிறப்புகளை கொண்ட கோவில் இதுவாகும்.

2. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் :

பஞ்ச பூத தலங்களில் அக்னி சொரூபமாக சிவ பெருமான் காட்சி தரும் தலம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். முக்தி தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் சிவனே மலையாக காட்சி தருவதாக நம்பப்படுவதால் இங்கு கிரிவலம் வந்து சிவனை வணங்கினால், முக்தி நிச்சயம். சிவன் அருளும், சித்தர்கள் அருளும் ஒரு சேர அருளக் கூடிய தலமாகவும் திருவண்ணாமலை உள்ளது. மனதார நினைத்தாலே முக்தியை அருளக் கூடிய தலமும் இது தான்.
3. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் :

பிரம்மாண்டத்தின் உச்சமாக திகழும் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்துமே பெரியது தான். நந்தி, லிங்கம், ஆவுடையார் என அனைத்தும் பெரியது. 15 தளங்கள் கொண்ட கற்கோவிலாக திகழும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கருவறையில் இருக்கும் லிங்கம் தான் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். இவரை பெருவுடையார் என்றே பக்தர்கள் அழைக்கிறார்கள். ஆன்மிக, அறிவியல், இலக்கியம் என அனைத்தும் வகைகளிலும் சிறப்பு பெற்று, பல ஆச்சரியங்களை தனக்குள் கொண்ட கோவில் இது.

4. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களின் மூலக் கோவிலாக உள்ளது. இங்கு முதல் பூஜை அன்னை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. சிதம்பரம், காசி, காளகஸ்தி வரிசையில் நான்காவது முக்கிய சிவாலயமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலை தலத்தை நினைத்ததும் முக்தி கிடைப்பதை போல், மதுரை பெயரை கேட்டதும் பேரின்ப நிலை கிடைக்கும் என்பது ஐதீகம். ஈசன் தன்னுடைய 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய தலமும் இது தான்.

5. சிதம்பரம் நடராஜர் கோவில் :

பஞ்ச பூத தலங்களில் ஈசன் ஆகாயமாக காட்சி தரும் தலம் சிதம்பரம் நடராஜர் கோவிலாகும். மனித உடல் மற்றும் அதன் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலம் சிதம்பரம் நடராஜர் கோவிலாகும். இக்கோவில் பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மட்டுமே சிவனின் 108 பரதநாட்டிய நிலைகளின் சிற்பங்களை காண முடியும். அதே போல் அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளிலும் இக்கோவிலில் சிவனை தரிசிக்க முடியும். நடராஜர் மூலவராக இருக்கும் வெகு சில தலங்களில் முதன்மை தலமாக விளங்குவது இது தான்.

6. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் :

பஞ்ச பூத தலங்களில் பூமி தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில். இதுவும் முக்தி தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. கோவில்களில் நகரம், ஆன்மிக பூமி என போற்றப்படும் காஞ்சிபுரம் தான் அதிக சிவலாயங்கள் உள்ள, அதிகமான திவ்ய தேசங்கள் கொண்ட தலமாகவும் உள்ளது. அதனால் இது சைவர்களுக்கு மட்டுமல்ல வைணவர்களுக்கும் மிக முக்கியமான தலமாகும்.

7. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் :

தமிழகத்தில் உள்ள முக்கியமான கற்கோவில்களில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. காஞ்சிபுரத்தில் உள்ள மிக பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத் திருமேனியாக காட்சி தருகிறார். இவரை தரையில் படுத்தபடி ஊர்ந்து சென்று மட்டுமே தரிசிக்க முடியும். மிக குறுகலான திருச்சுற்று சுவர்களை சுற்றி வந்து வழிபட்டால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

8. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் :

சென்னையில் உள்ள சப்த சிவத்தலங்களில் ஒன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். பார்வதி தேவி, சிவனை மயில் வடிவில் வழிபட்ட தலமாகும். மிகப் பழமையான பல்லவர் காலத்து கோவிலான இக்கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக உள்ளது. புகழ்பெற்ற சிவ தலமாகவும், புகழ்பெற்ற சக்தி தலமாக இக்கோவில் விளங்குகிறது.

9. பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவில் :

கும்பகோணத்தில் 108 சிவலிங்கங்களைக் கொண்ட தலம் பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலாகும். இக்கோவில் ஸ்ரீ ராமரால் கட்டப்பட்ட தலம் என்றும், இங்குள்ள 107 சிவலிங்கங்களை ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்ததாகவும், மற்றொரு லிங்கத்தை ஆஞ்சநேயர் காசியில் இருந்து கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இக்குள்ள மூலவர் ராலிங்க சுவாமி என்றும், அனுமன் கொண்டு வந்த லிங்கம் அனுமந்த லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

10. மகாபலிபுரம் கடற்கரை கோவில் :

மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தமிழ்நாட்டில் முதன் முதலில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவிலாகும். 45 அடி உயரம் கொண்ட இக்கோவிலில் சோமாஸ் கந்தர் லிங்க ரூபமாகவும், பெருமாள் ஜலசயன கோலத்திலும் காட்சி தருகின்றனர். கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோவில் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரிய தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11. கங்கை கொண்ட சோழபுரம் :

ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவில் கங்கைகொண்ட சோழபுரம் ஆகும். தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலுக்கு இணையாக கட்டப்பட்டது இக்கோவிலாகும். இதை ஐக்கிய நாடுகள் சபை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இங்குள்ள சிவனுக்கு கங்கை கொண்ட சோழீசுவரர், பிரகதீஸ்வர் என பல பெயர்கள் உண்டு.

12. திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவில் :

இதுவும் பஞ்ச பூத தலங்களில் ஒன்றாக விளங்கக் கூடியது. இங்கு சிவ பெருமான் தண்ணீரின் வடிவில் காட்சி அளிக்கிறார். திருவானைக்காவல் என அழைக்கப்படும் இத்தலம் அப்பு தலம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள லிங்கம் தரை மட்டத்திற்கு கீழ் உள்ளதால் எப்போதும் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். காவிரி நதி வறண்டிருக்கும் போதும் இங்கு நீர் வற்றுவதில்லை. சிவாலயமாக இருந்தாலும் அம்பிகையை முதன்மைப்படுத்தி வழிபடும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author