துபாயில் தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்து வரும் நிலையிலும், அந்நகரின் ஆடம்பரத்திற்கும் வியப்பிற்கும் பஞ்சமில்லாத வகையில் “தங்கச் சாலை” என்ற புதிய மெகா திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாயின் பாரம்பரிய வர்த்தக மையமான தேராவில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையகங்களைக் கொண்ட புதிய “துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்” என்ற வளாகம் உருவாக்கப்படவுள்ளது.
இதன் ஒரு முக்கிய அங்கமாக, உலகின் முதல் முறையாக தங்கத்தை உள்கட்டமைப்பில் பயன்படுத்தி உருவாக்கப்படும் “தங்கச் சாலை” அமையவுள்ளது. இத்திட்டம் துபாயை உலகின் மிகச்சிறந்த தங்க வர்த்தக மையமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கிய இடமாகவும் மாற்றும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரம்மாண்டமான திட்டத்தை ‘துபாய்’ என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இதில் மலபார் கோல்ட், தனிஷ்க் போன்ற உலகப்புகழ் பெற்ற நிறுவனங்கள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தனது மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்பெரிய கிளையை இங்கு அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும் துபாயின் கலாச்சாரம் மற்றும் வணிகப் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமையும் இந்தத் தங்கச் சாலையின் முழுமையான வரைபடம் மற்றும் கட்டுமான விவரங்கள் இன்னும் சில காலங்களில் படிப்படியாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நவீன தொழில்நுட்பம் மற்றும் கலைநயத்துடன் கூடிய ஒரு தனித்துவமான சுற்றுலாத் தலமாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
