உலகின் முன்னணிப் பணக்காரர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாக ஆக்ஸ்பாம் சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டு அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தந்துள்ளளது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.5 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதில் பாதியை மட்டும் தானமாக வழங்கினால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு உலகில் ஒருவரைக் கூட பசியால் வாடவிடாமல் உணவு வழங்க முடியும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதன் மூலம் உலகளாவிய ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதுடன், பள்ளிக்குச் செல்லாத 26 கோடி குழந்தைகளுக்குத் தரமான கல்வியை வழங்கி அவர்களை வறுமையிலிருந்து மீட்க முடியும். மேலும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் ஏழை நாடுகளுக்குச் சுத்தமான குடிநீர், தடுப்பூசிகள் மற்றும் மலேரியா போன்ற நோய்களை ஒழிக்கத் தேவையான அடிப்படை மருத்துவ வசதிகளையும் வழங்க இத்தொகை போதுமானதாகும்.
ஆனால், தற்போதைய சூழலில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் மாறி வருகின்றனர். 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், உலகின் பாதி மக்கள் தொகையினர் இன்னும் வறுமையிலேயே வாடுகின்றனர்.
பணக்காரர்கள் தங்களின் பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகவும், ஒரு சாதாரண மனிதரை விட ஒரு கோடீஸ்வரர் அரசியலில் பதவியைப் பெறுவதற்கு 4,000 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த நிலையை மாற்றப் பணக்காரர்கள் மீது அதிக வரி விதிப்பதுடன், சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் தேவை என்று ஆக்ஸ்பாம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
