கால்வான் மோதலுக்கு பிறகு ரகசிய அணுசோதனை – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு.. சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

2020ம் ஆண்டில் சீனா தொடர்ச்சியான ரகசிய அணுசக்தி சோதனைகளை நடத்தியதாகவும், அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கைகளை மறைத்ததாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நியூ ஸ்டார்ட் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் காலாவதியான நிலையில், ரஷ்யா முன் மொழிந்த நீட்டிப்பு கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தத்தில் சீனாவையும் இணைக்க வேண்டுமென்று ரஷ்யாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் நடந்த ஆயுதக் குறைப்பு குறித்த ஐநா சபையின் மாநாட்டில் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான துணைச் செயலாளர் தாமஸ் டினானோ, சீனா அணு ஆயுத சோதனைகளை இரகசியமாக செய்து வருவதாக அமெரிக்காவுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த 2020-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் எல்லையில் நடந்த கல்வான் மோதலுக்கு 7 நாட்கள் கழித்து சீனா அணுஆயுத சோதனை செய்தது என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து இந்தியாவின் எல்லையருகே ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லாப் நூர் தளத்தில், பெரும் நிலை அதிர்வுகளை மறைக்கும் decoupling தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான டன்களில் சீனா அணு ஆயுத சோதனைகளை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

சீனாவை அணு ஆயுத அச்சுறுத்தல் என்று அழைக்கப்படுவதை அமெரிக்கா தொடர்ந்து ஊதிப் பெரிதாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ள அணு ஆயுதக் குறைப்புக்கான சீனாவின் தூதர் ஷென் ஜியான், இதுபோன்ற தவறான கதைகளை உறுதியாக சீனா எதிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கூடுதலாக அணு ஆயுதப் போட்டி மோசமடைவதற்கு அமெரிக்காதான் காரணம் என்றும் குற்றசாட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், அணுசக்தி சோதனை தடையை சீனா கடைப்பிடிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அணுசோதனை-தடை ஒப்பந்த அமைப்பு, அணு ஆயுத சோதனையை சீனா செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகச் செயலாளர் ராபர்ட் ஃபிலாய்ட் Robert Floyd தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவேளை சீனா ரகசியமாக அணுஆயுத சோதனை செய்திருக்கலாம் என்று ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டேரில் கிம்பால் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்ட சர்வதேச ஆயுதக் கட்டுப்பாட்டு அறிக்கையில், சீனா அணு சோதனை நடத்தியதாக எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.

மேலும் சீன இராணுவ முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு கொடுத்த இந்த ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையிலும் சீனா அணு சோதனை நடத்தியதாக பென்டகன் குறிப்பிடப் படவில்லை.

ஏற்கெனவே சீனாவிடம் 600 அணு ஆயுதங்கள் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் சீனாவிடம் 1500 அணுஆயுதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் 5,500 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களும் அமெரிக்காவிடம் 5,044 அணு ஆயுதங்களும் உள்ளன என்று அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

ஆயுதப் போட்டியை நிறுத்த விரும்புவதாக ரஷ்யாவும், அமெரிக்காவும் சீனாவும் வெளியில் சொல்லிவந்தாலும் அந்நாடுகளின் செயல்பாடுகள் அப்படியில்லை.

ஒரு புதிய அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வருமா? என்ற கேள்வி தான் சர்வதேச மக்கள் மனதில் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author