தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (பிப். 13) மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுகவின் தேர்தல் வியூகம் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அவர் கூறுகையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டும் தனித்து 170 தொகுதிகளில் போட்டியிடும்.
அதில் 160 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம்” எனத் தெரிவித்தார். கடந்த 2021 தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் அதே போன்ற ஒரு கணக்கை அமைச்சர் முன்வைத்துள்ளது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் அதிக இடங்களைக் கோரி வரும் நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
