ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் சீனா பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் தற்போதைய பதற்றம் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அமெரிக்கா தனது ராணுவ வலிமையை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், புதிய மோதல்களை உருவாக்குவதற்குப் பதிலாக பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தம் மூலம் அமைதியான தீர்வுகளைக் காண வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை, சீனா நேரடியாகப் போரில் ஈடுபடவில்லை என்றாலும், அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஆதரிப்பதாக வாங் யி தெரிவித்தார். இந்த நெருக்கடிக்கான அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து களைவது அவசியம் என்றும், ஐரோப்பாவும் ரஷ்யாவும் நேரடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைச் சீனா வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
இதனால் உக்ரைன் போருக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்த முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்றும், அமைதி திரும்புவதற்கான சூழலை உருவாக்க சீனா எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
