மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவுள்ளார். தொடர்ந்து மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
இதற்காக மேடை அமைக்கும் பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வருகை தந்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் கோயிலில் மனமுருகி வழிபாடு நடத்தினார்.
