தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இன்று பசும்பொன்னில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மிக முக்கியமான முடிவை அறிவிக்கப் போவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் புதிய கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பசும்பொன் பயணத்திற்கு முன்னதாக, சென்னையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சசிகலா நேற்று நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அரசியல் ரீதியாக அவர் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முன்னதாக இந்த மரியாதை நிமித்தமான வருகை அமைந்தது.
நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம், “புதிய கட்சி தொடங்கப் போகிறீர்களா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
“பசும்பொன்னில் அம்மாவின் (ஜெயலலிதா) பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். அங்கு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம். அந்த கூட்டத்தில் அந்த நல்ல தகவலை முறைப்படி அறிவிப்பேன். அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பசும்பொன்னில் நடைபெறவுள்ள விழாவில் நலத்திட்ட உதவிகளுடன், தனது அரசியல் எதிர்காலம் குறித்த அதிரடி முடிவை சசிகலா அறிவிக்கவுள்ளார். அதிமுக-வை மீட்பதா அல்லது தனிக்கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திப்பதா என்பது குறித்த தெளிவான பிம்பம் இன்று தெரிந்துவிடும் என்பதால், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

