அண்ணா அறிவாலயத்தின் கதவுகள் அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்காகத் திறக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றவர்கள் வரிசை கட்டும் நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோரின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.
ராயபுரம் தொகுதியில் தனது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும், அதிமுகவில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் ஆதிக்கம் அதிகரிப்பதாலுமே ஜெயக்குமார் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, கடந்த தேர்தலில் தனது தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம் என அவர் கருதுவதால், ‘உதயசூரியன்’ நிழலில் ஒதுங்குவது பாதுகாப்பானது என அவர் கணக்கு போடுவதாகத் தெரிகிறது.
மறுபுறம், மதுரையின் முகமாக அறியப்படும் செல்லூர் ராஜுவும் திமுக தரப்புடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. தென் மண்டலத்தில் ஆர்.பி. உதயகுமாருக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் அதிருப்தியில் இருக்கும் அவர், மீண்டும் அதிகாரமிக்க பதவிக்கு வர ஆளுங்கட்சி பக்கமே சாய்ந்தால் நல்லது என நினைக்கிறாராம்.
முக்குலத்தோர் வாக்குகளைக் கவர செல்லூர் ராஜுவை இழுப்பது திமுகவின் மாஸ்டர் பிளானாகப் பார்க்கப்படுகிறது. இபிஎஸ்-ஸின் பிடியிலிருந்து இத்தகைய முக்கியத் தூண்கள் சரியத் தொடங்கினால், 2026 தேர்தல் களம் அதிமுகவிற்கு மிகப்பெரிய சவாலாகவே அமையும்.
