மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப்பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனது ‘ட்ரூத் சோசியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “வரலாற்றின் மிகத்தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார்; இது ஈரான் மக்களுக்கும், அமெரிக்காவிற்கும் கிடைத்த நீதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய “யூதாவின் கேடயம்” வான்வழித் தாக்குதலில் கமேனி மற்றும் ஈரானிய புரட்சிகர காவற்படையின் (IRGC) முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும், கமேனியின் மறைவோடு போர் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதையும் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். “முழுமையான அமைதி என்ற இலக்கை அடையும் வரை, ஈரானின் ராணுவத் தளங்கள் மற்றும் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மீதான துல்லியமான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இந்த வாரம் முழுவதும் தடையின்றித் தொடரும்” என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஒருபுறம் கமேனி கொல்லப்பட்டதை ஈரான் வெளியுறவுத்துறை மறுத்து வரும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட நகரங்கள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்தத் தொடர் தாக்குதல் எச்சரிக்கை ஈரானை நிலைகுலையச் செய்துள்ளது.
