அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் நூல்!

Estimated read time 1 min read
பொதுவாக விஞ்ஞானிகள் என்கிற சொல்லைக் கேட்டவுடனயே நம் நினைவுக்கு வருவது நியூட்டனும் ஐன்ஸ்டைனும்தான். இந்திய அளவில் என்றால் சி.வி.ராமனும் ராமானுஜனும் வருவார்கள்.
விஞ்ஞானிகளில் பெண்களே இல்லையா என்று அடுத்த கேள்வி வந்தால், மேரி க்யூரி மட்டும் ஞாபகத்துக்கு வரலாம். இதுதான் இன்றைய வெகுஜன புரிதல்.
ஆனால், பழங்காலம் முதலே அறிவியலில் ஈடுபட்ட பெண்கள் ஏராளமானோர் இருந்திருக்கிறார்கள். முறையான அறிவியல் நிறுவனங்கள் உருவாவதற்கு முன்பே அவர்களது பங்களிப்புகள் பல்வேறு துறைகளில் இருந்துள்ளன.
உதாரணமாக இந்தப் புவி தோன்றிய காலத்தில் இருந்தே பெண்கள் மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். மகப்பேறு அறிவியல் இன்றைக்கு அடைந்திருக்கும் ஆச்சரியமூட்டும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள் பண்டைய காலம் முதலே சமூகத்தில் இருந்துவரும் ‘மிட்வைவ்ஸ்’ என அறியப்பட்ட மகப்பேறுச் செவிலியர்கள்தான்.
இதேபோல் கணிதம், வானியல், புவியியல் எனப் பிற துறைகளிலும் இவர்களது பங்களிப்புகள் இருந்திருக்கின்றன. சிலரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் பொயுமு 2700-ம் ஆண்டில் வாழ்ந்த மெரிட்டா (Merit-Ptah) என்பவர்தான் முதல் பெண் அறிவியல் அறிஞர். இவர் ஒரு மருத்துவர். இதன்பின் பொயுமு 2285-ஐ சேர்ந்த என் ஹேடு அன்னா (En Hedu’Anna) சுமேரிய நாகரிகத்தில் வாழ்ந்த வானியல் அறிஞர்.
தியானோ, பொயுமு 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியல் வல்லுநர். பிதாகரஸின் முதல் மாணவி, பிதாகரஸின் மனைவி என்றும் சிலர் சொல்கின்றனர். பிதாகரஸின் மறைவுக்குப் பின் அவரது பள்ளியைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். அதில் பல பெண்கள் மாணவிகளாகவும் ஆசிரியராகவும் இருந்துள்ளனர்.
பொயு 350-ஐ சேர்ந்த ஹைபேஷா மிகச் சிறந்த கணிதவியலாளர். வடிவக் கணிதம் (Geometry), குறிக்கணிதம் (Algebra) போன்றவை பற்றி நிறைய உரைகள் எழுதியுள்ளார். அப்போதிருந்த பல விஞ்ஞானப் புத்தகங்களுக்குக் குறிப்புகளும் எழுதி இருக்கிறார். இவரது உரையைக் கேட்க ஏராளமான மக்கள் கூடுவார்களாம். மிகப் பிரபலமாக அறியப்பட்ட இவர் மதவாதிகளால் கொல்லப்பட்டார்.
1847 VI எனும் வால்நட்சத்திரத்தைக் கண்டறிந்தவர் மரியா மிச்சல், வகை நுண்கணிதம் (Differential Calculus) சார்ந்த பல வாதங்களை முன்னெடுத்தவர் மரியா அக்னேசி. இப்படி, தொன்ம காலம் தொடங்கி, இடைக் காலம், நவீனக் காலம் வரை அறிவியல் துறைகளில் இயங்கிய பெண்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த வரிசையில்தான் நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளும் இடம்பெறுகிறார்கள். நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 1903-ம் ஆண்டே மேரி க்யூரி அந்தப் பரிசினை வென்று வாகை சூடிவிட்டார். அதுவும் ஒருமுறை அல்ல; இருமுறை.
அதன்பின் இதுவரை மொத்தம் 25 பெண் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள். இவற்றில் மருத்துவம் சார்ந்த நோபல் பரிசு பெற்றவர்கள் 13 பேர். இவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களது வாழ்வையும் கண்டுபிடிப்புகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்துள்ளார் வெண்பா.
இன்று பரவலாகக் காணப்படும் நீரிழிவுக் குறைபாட்டை அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருத்துவத்துக்கு அடித்தளமிட்டதில் தொடங்கி, மரபியல் கோட்பாடுகள், நரம்பு செல்கள் குறித்த ஆய்வுகள், மருந்து கண்டறியும் முறைமை, முதுமை தொடர்பான ஆய்வுகள், புற்றுநோய் தொடர்பான புரிதல்கள், மூளையின் செயல்பாடுகள், தடுப்பு மருந்துகள், எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்து எனப் பலவற்றில் பங்களித்திருக்கிறார்கள். இந்தப் பங்களிப்புகளை விரிவாக விளக்குகிறார் வெண்பா.
வாகைசூட வேண்டும் என்றால் போரில் வெற்றி பெற வேண்டும் இல்லையா? அதற்கு ஏற்றவாறு இதில் வரும் பெண்கள் பெண்ணாகப் பிறந்ததற்காகவே குடும்பத்திலும் பணியிடங்களிலும் சமூகத்திலும் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துள்ளார்கள். பொருளாதார ரீதியாக, உரிமைகள் சார்ந்த பல சவால்களை, அவமானங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
இருப்பினும் அறிவியல் மேல் உள்ள ஈடுபாட்டால், இயற்கையை அறிய வேண்டும் என்கிற பேரார்வத்தால், மனிதகுலத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்கிற லட்சிய மனப்பான்மையால் அவற்றையெல்லாம் வென்று வாகை சூடியிருக்கிறார்கள். அவர்களின் வரலாறே வெண்பாவின் வாகை சூடிய விஞ்ஞானிகள் புத்தகம்.

அறிவியலையும் தமிழையும் ஒன்றிணைத்து மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் புதிய அறிவுப் பார்வையை அளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் இந்த நூல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவைப் விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

– நன்மாறன் திருநாவுக்கரசு

The post அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் நூல்! appeared first on Thaaii Magazine.

Please follow and like us:

You May Also Like

More From Author