
மகாராஷ்டிராவின் பவ்னி தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில், ஆசிரியரிடம் திட்டு வாங்குவதைத் தவிர்க்க, 11 வயது மாணவன் ஒருவன் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த அந்த 11 வயது மாணவன், வகுப்பறைப் பலகையில் சில ஆபாசமான வாக்கியங்களை எழுதியுள்ளான். இதைக் கவனித்த ஆசிரியர்கள், உடனடியாகப் பெற்றோரை நேரில் அழைத்து வருமாறு மாணவருக்குக் கட்டளையிட்டனர். இதனால் அச்சமடைந்த மாணவன், இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியை நாடியுள்ளான். ‘தவறை ஒப்புக்கொள்’ என AI பரிந்துரைத்த போதிலும், தந்தையிடம் அடிவாங்கி விடுவோமோ என்ற பயத்தில், தான் கடத்தப்பட்டதாக ஒரு கற்பனைக் கதையை உருவாக்கியுள்ளான்.
யூடியூபில் பார்த்த சில காட்சிகளை வைத்து, தானே ஒரு கதையை உருவாக்கியுள்ளான் அந்தச் சிறுவன். “பள்ளி பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ஒரு மர்ம நபர் கழுத்தில் கத்தியை வைத்து கடத்தினார். மயக்க மருந்து கொடுத்து நாக்பூர் நோக்கி அழைத்துச் சென்றபோது, கோயில் ஒன்றில் தப்பித்தேன்” என்று அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் அந்தச் சிறுவன் விவரித்துள்ளான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸில் புகார் அளித்தனர். ஆனால், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், சிறுவன் கூறியதற்கு முரணாக எந்தத் தடயமும் இல்லை என்பதைக் கண்டறிந்தனர். போலீஸாரின் தீவிர விசாரணைக்குப் பிறகு, தான் பயத்தில் இந்தக் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதை சிறுவன் கண்ணீருடன் ஒப்புக்கொண்டான்.
மேலும் குழந்தைகளைக் குற்றம் சொல்வதை விட, அவர்களுடன் பெற்றோர் தரமான நேரத்தைச் செலவிடுவது அவசியம். அவர்களது தனிமையைப் போக்கி, அன்புடன் உரையாடினால்தான் இத்தகைய விபரீதங்களை தவிர்க்க முடியும்” என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
