சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், உலகிலேயே முதல்முறையாக கடல் நடுவே கப்பல்களுக்குப் பெரும் தொகையை வரியாக விதிக்க ஈரான் திட்டமிட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ வழியாகச் செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் சுமார் 18 கோடி ரூபாய் (2 மில்லியன் டாலர்) வரி விதிக்க அந்த நாடு ஆலோசித்து வருகிறது.
உலக வரைபடத்தில் சிறிய நீர்ச்சந்தியாகத் தெரிந்தாலும், இது சர்வதேச எரிசக்தி பாதுகாப்பின் ‘வாழ்க்கைப் பாதை’ ஆகும். உலக அளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் (LNG) 20 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த அரபு கடல் மற்றும் பாரசீக வளைகுடா இடையேயான குறுகிய பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தங்களது எண்ணெயை உலகிற்கு அனுப்ப இந்தப் பாதையையே நம்பியுள்ளன.
ஈரான் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த விவாதத்திற்கு அந்நாட்டு அதிகாரிகள் இரண்டு காரணங்களைக் கூறுகின்றனர். அதாவது இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பைப் பராமரிக்க ஈரான் பெரும் செலவு செய்வதால், அதைப் பயன்படுத்தும் வெளிநாட்டு கப்பல்கள் ‘பாதுகாப்பு வரி’ வழங்க வேண்டும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றமான சூழலில், ராணுவச் செலவுகளைச் சமாளிக்க நிதி தேவைப்படுவதால் இந்த வரி விதிக்கப்படுவதாகச் சில உறுப்பினர்கள் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.
கப்பல்களுக்கு விதிக்கப்படும் இந்த அதிரடி வரி, மறைமுகமாகச் சாமானிய மக்களின் பாக்கெட்டுகளைப் பாதிக்கும். ஒரு கப்பல் 18 கோடி ரூபாய் கூடுதல் வரி செலுத்தினால், அந்தச் சுமை நுகர்வோர் மீதே சுமத்தப்படும். இதனால் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும். இந்தப் பாதை வழியாக எண்ணெய் மட்டுமின்றி, உணவு தானியங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன. போக்குவரத்துச் செலவு அதிகரித்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட இந்தியப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியக் கப்பல்களும் இந்த வரியைச் செலுத்த நேரிட்டால், நாட்டில் பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் வைப்பது மத்திய அரசுக்குப் பெரும் சவாலாக மாறும்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஈரானின் இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, இத்தகைய நீர்ச்சந்திகளில் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால், எதற்கும் அஞ்சாத ஈரான், “எங்கள் பாதையைப் பயன்படுத்தினால் எங்கள் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்” என்பதில் உறுதியாக உள்ளது. மேலும் இந்த ‘கடல்வழிப் போர்’ உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால், சர்வதேச சமூகம் ஈரானின் அடுத்தடுத்த நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
