அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தனது நெருங்கிய நண்பனான சீனாவிற்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சீனாவின் அரசு நிறுவனமான COSCO-வுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளது.
போர் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தியிருந்த சீனா, மீண்டும் வியாழக்கிழமை முதல் தனது பணிகளைத் தொடங்கிய நிலையில், ஈரானின் இந்த திடீர் நடவடிக்கை சீனாவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மறைமுகமாக ஈரானுக்கு உதவி வரும் சீனாவுக்கு, இந்தச் சம்பவம் பெரும் கோபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தனது நட்பு நாடுகளுக்காக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து விடுவதாக ஈரான் ஏற்கனவே அறிவித்திருந்த போதிலும், தற்போது சீனக் கப்பல்களையே யூ-டர்ன் எடுக்க வைத்திருப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானுக்குப் பக்கபலமாக இருக்கும் சீனாவின் மீது ஈரான் ஏன் இத்தகைய நடவடிக்கையை எடுத்தது என்பது குறித்து இதுவரை சீனா எந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.
