உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களுக்குப் பயணக் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக இந்தப் பாதையில் கப்பல் போக்குவரத்து முடங்கியிருந்த நிலையில், தற்போது வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த அதிரடி முடிவை ஈரான் எடுத்துள்ளது.
இருப்பினும், மலேசியா போன்ற நட்பு நாடுகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மலேசியக் கப்பல்கள் எந்தவிதத் தடையுமின்றி, இலவசமாக ஜலசந்தியைக் கடக்கலாம் என்று கோலாலம்பூரில் உள்ள ஈரானிய தூதர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் போக்கிற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் மூடப்படவில்லை என்றும், சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
மலேசியாவைத் தவிர இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளின் கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இந்த ஜலசந்தி முக்கியப் பங்கு வகிப்பதால், ஈரானின் இந்த புதிய சுங்கக் கட்டண முறை மற்றும் நட்பு நாடுகளுக்கான சலுகைகள் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
