அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பலவீனமடைந்துள்ள ஈரானின் ஏவுகணைப் படையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா ரகசியமாக உதவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் சேமிப்புத் தளங்களை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் குறிவைத்துத் தாக்கி வரும் நிலையில், ஏவுகணை தயாரிப்பிற்குத் தேவையான ‘சோடியம் பெர்குளோரேட்’ போன்ற முக்கிய வேதிப்பொருட்களை சீனா ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து இதுவரை ஐந்து முறை இத்தகைய ஏவுகணை எரிபொருள் தொடர்பான பொருட்கள் சீனாவிலிருந்து ஈரானைச் சென்றடைந்துள்ளதாகப் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தடைகளையும் மீறி, ஈரானியக் கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் இந்த பொருட்கள் அந்நாட்டின் சாபஹார் மற்றும் பந்தர் அப்பாஸ் துறைமுகங்களை வந்தடைந்துள்ளன. தாக்குதலில் சேதமடைந்த நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை ஈரான் மிக வேகமாகக் கட்டமைத்து வருவதற்கு சீனாவின் இந்த விநியோகங்களே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
ஈரானின் ஏவுகணைத் திட்டம் மிகவும் சிக்கலானது என்பதால், அதன் முழுமையான பலத்தை அழிப்பது அமெரிக்காவிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. சீனாவின் இந்த வெளிப்படையான ஆதரவு மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
