ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது. இந்தப் பதற்றமான சூழலில், இந்தியாவுக்கு மட்டும் ஒரு நிம்மதி தரும் செய்தியை ஈரான் அறிவித்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ ஈரான் மூடியுள்ளதால், பல நாடுகளின் எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாகத் திறக்கக் கோரி, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.
மத்தியஸ்த நாடுகளின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், “இன்று இரவுக்குள் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், அழிவு தொடங்கும்” எனத் தாக்குதலுக்கான நேரத்தையும் தேதியையும் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால் வளைகுடா நாடுகளில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
உலக நாடுகள் பலவும் இந்தப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பாதையை வழங்க ஈரான் முன்வந்துள்ளது. இது குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதர் முகமது ஃபதாலி கூறியதாவது: ஹார்முஸ் ஜலசந்தி என்பது சர்வதேச நீர்வழி அல்ல; அது ஈரானின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி. போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மட்டுமே இது மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் பொறுமையான அணுகுமுறையை ஈரான் மதிக்கிறது. இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றார்.
மத்திய கிழக்கு நாடுகளின் இந்த மோதலைத் தணிக்க இந்தியா மிக முக்கியமான பங்காற்ற முடியும் என ஈரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை விமர்சித்த ஈரான் தூதர், சிக்கியுள்ள இந்தியக் கப்பல்களை மீட்கவும், அமைதியை நிலைநாட்டவும் இந்தியா எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
